திருப்பூர் மாவட்டம் பாளையக்காடு பாறைக்குழியை சேர்ந்தவர் சஞ்சய்குமார். இவரது மனைவி உஷா. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு இன்று காலை பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
திருப்பூர் பழைய ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்து ஆம்புலன்ஸ் புறப்பட்டது. ஆம்புலன்சை கார்த்திக் ஓட்டினார். மருத்துவ உதவியாளராக பாண்டியம்மாள் வந்தார்.
பாறைக்குழி வந்ததும் பிரசவ வலியால் துடித்த உஷாவை மீட்டு ஆம்புலன்சில் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் பிரசவம் ஆகும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து ஆம்புலன்ஸ் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
டிரைவர் கார்த்திக்கின் உதவியுடன் பாண்டியம்மாள் பிரசவம் பார்த்தார். தாயும், சேயும் நலமுடன் உள்ளனர். இருந்தாலும் தொற்று மற்றும் பராமரிப்புக்காக உஷாவும், அவரது குழந்தையும் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
நடுவழியில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த பாண்டியம்மாள் மற்றும் டிரைவர் கார்த்திக்கை உஷாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.