திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ளது அம்மாபட்டி. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்கு சில நாட்களாக கடுமையான கால் வீக்கம் மற்றும் கடுமையான வலியுடன் மர்ம காய்ச்சல் பரவியது.
ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டால் குடும்பம் முழுவதும் பரவியது. குழந்தைகள் உள்பட 250-க்கும் மேற்பட்டோர் இந்த மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜல்லிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இதில் 50-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது, நாங்கள் கூலி வேலைக்கு சென்று பிழைத்து வருகிறோம். எங்களுக்கு திருமூர்த்தி அணை திட்டத்தின் கீழ் இந்த பகுதிக்கு ஒரே ஒரு குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் பற்றாக் குறையால் அம்மாபட்டியில் உள்ள குளத்தில் தண்ணீர் எடுத்து உபயோகித்து வருகிறோம். குறிப்பிட்ட குளத்தில் சாக்கடை நீர், செப்டிக் டேங் கழிவுகள் கலந்து விடுகின்றன. இதனை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. தற்போது கிராமமே மர்ம காய்ச்சலால் அவதிப்படுகிறோம் என்றனர்.
இந்நிலையில் நேற்று உடுமலை- அம்மாபட்டி சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். காய்ச்சலால் கிராமமே முடங்கியுள்ளது. எங்கள் கிராமத்தில் சிறப்பு முகாம் அமைத்து மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும். போதிய குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.