தாராபுரம் தம்புரெட்டிபாளையம் மேட்டாங்காட்ட தோட்டத்தை சேர்ந்த ரத்தினசாமி என்பவர் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில்:-
நான் விவசாயம் செய்து வருகிறேன். பனியன் தொழிலும் தெரியும். இதனால் கடந்த 2017-ம் ஆண்டு வரை கொடுவாயில் உள்ள பூமா பனியன் கம்பெனியில் அயர்ன், பேக்கிங், சூப்பர்வைசராக வேலை செய்து வந்தேன். அப்போது திண்டுக்கல் மாவட்டம் தெப்பக் குளத்துப்பட்டி அருகில் உள்ள அழகுப்பட்டியை சேர்ந்த ஜெகநாதன் என்பவரது மகன் ஜெ.ராஜா என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர் எனக்கு பல்லடத்தில் உள்ள ஒரு வங்கியில் வேலை வாங்கி தருகிறேன் எனக்கூறினார்.
இதனை நானும், எனது குடும்பத்தினரும் நம்பினோம். அதன்படி அவருக்கு பல்வேறு கட்டங்களாக ரூ.25 லட்சம் வரை கொடுத்துள்ளேன். இந்த பணத்தை அவரது உறவினர் பிரேம்குமார் என்பவர் வாங்கி சென்றார். ஆனால் இதுவரை அவர்கள் வங்கியில் வேலை வாங்கி தரவில்லை. எனக்கு பணமும் வழங்கவில்லை. அவர்களின் செல்போன் எண்ணும் துண்டிக்கப்பட்டுள்ளது. அவர்களும் தலைமறைவாக உள்ளனர். எனவே மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.