சென்னை, ஜெய்ப்பூரில் உள்ள நகைக்கடைகளில் அமலாக்கத்துறையினர் சோதனை. பல கோடி ரூபாய் பணம், 39 கிலோ தங்கம் பறிமுதல்
தங்கக் கடத்தல் மற்றும் ஹவாலா மோசடி விவகாரத்தில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையில் 3 கோடியே 75 லட்சம் ரூபாய் பணமும், 39 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் செயல்பட்டு வரும் சில நகைகடைகள் கடத்தல் தங்கத்தை சென்னையை சேர்ந்த சில நிறுவனங்கள் மூலம் வாங்குவதாக அமலாக்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் கடத்தல் தங்கம் கொல்கத்தா வழியாக ஜெய்ப்பூருக்கு கொண்டு செல்வதும், அதன் மூலமாக செய்யப்பட்ட நகைகளை கணக்கில் காட்டாமல் ஹவாலா தரகர்கள் மூலம் பரிவர்த்தனை செய்ததும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக ஜெய்ப்பூரை சேர்ந்த 3 கடைகளின் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறையினர், அவர்களுக்கு சொந்தமான இடங்களில் இருந்து 3 கோடியே 75 லட்சம் ரூபாய் பணமும், 39 கிலோ கடத்தல் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர். இவை தவிர பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது