ஹாங்காங் & லண்டன், உலகம் முழுக்க ஒரு நிலையற்றதன்மை நிலவிக் கொண்டு இருக்கிறது. இதை பல சர்வதேச அமைப்புகள் தொடங்கி, பல நாட்டின் அரசு அமைப்புகள் வரை சொல்லி கொண்டு தான் இருக்கிறார்கள்.
ஆனால் இதன் விளைவுகள் தான், நாம் அதிகம் எதிர்பார்க்காத அளவுக்கு நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு இருக்கிறது. அதில் மிக முக்கியமான ஒன்று வேலை இழப்புகள்.
ஹாங்காங் ஷாங்காய் பேங்கிங் கார்ப்பரேஷன் ( Hongkong shanghai Banking Corporation) என்று அழைக்கப்படும் HSBC நிறுவனத்தைப் பற்றித் தான் இங்கு பார்க்க இருக்கிறோம். நோயல் க்வின் (Noel Quinn) தான் தற்போது HSBC வங்கியின் இடைக்கால முதன்மைச் செயல் அதிகாரியாக (CEO) இருக்கிறார். HSBC-யை பெரிய அளவில் மறு சீரமைக்க இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்களாம்.
இந்த HSBC நிறுவனத்தின் வருவாய் பெரிய அளவில் ஆசியாவில் இருந்து தான் வந்து கொண்டு இருக்கிறதாம். வரி செலுத்துவதற்கு முன்பான லாபம் கடந்த 2019-ல் 20.03 பில்லியன் டாலராக இருக்கலாம் என தரகு நிறுவனங்கள் கணித்து இருந்தார்கள். ஆனால் 13.35 பில்லியன் டாலர் மட்டுமே ஈட்டி எல்லோருக்கும் பலத்த ஏமாற்றத்தைக் கொடுத்தது.,சுமார் 7.3 பில்லியன் டாலர் பணத்தை Write-off செய்து இருக்கிறார்களாம். அதாவது, உலக வங்கி வியாபாரம், பங்குச் சந்தை மற்றும் வணிக கடன் வியாபாரங்களில் இழந்து இருக்கிறதாம். எனவே கடந்த 2019-ம் ஆண்டில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் வரவில்லை என்கிறார்கள். இதோடு நின்றால் கூட பரவாயில்லை. அமெரிக்காவில் தொடர்ந்து சரிவு தானாம்.
கடந்த பல வருடங்களாக HSBC வங்கி அமெரிக்காவில் தொடர்ந்து வியாபாரம் சரிந்து கொண்டு தான் இருக்கிறதாம். தற்போது அமெரிக்காவில் 224 வங்கிக் கிளைகள் இருக்கிறதாம். இதில் சுமாராக 30 சதவிகித கிளைகளை இழுத்து மூட இருக்கிறார்களாம். அதோடு இனி சர்வதேச மற்றும் பணம் இருக்கும் பெரிய வாடிக்கையாளர்களை மட்டுமே டார்கெட் செய்து வியாபாரம் செய்ய இருக்கிறார்களாம்.,HSBC வங்கியின் அமைப்பை மாற்ற, தன் சில்லறை வங்கி வியாபாரம், சொத்து மேலாண்மை வியாபாரம் மற்றும் உலகம் முழுக்க பரவி இருக்கும் தனியார் வங்கி வியாபாரத்தை ஒன்றாக இணைக்க இருக்கிறார்களாம். இப்படி இணைத்தால் உலகிலேயே அதிக சொத்துக்களை நிர்வகிக்கும் கம்பெனிகள் பட்டியலில் HSBC-யும் இடம் பெறுமாம்.
மிக முக்கியமாக தற்போது உலக அளவில் சுமார் 2.35 லட்சம் ஊழியர்கள் HSBC நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்களாம். அடுத்த மூன்று வருடத்துக்குள் சுமார் 35,000 பேரை வீட்டுக்கு அனுப்ப இருக்கிறார்களாம். எனவே இப்போதில் இருந்தே பல ஊழியர்களும், தங்கள் பெயர் இந்த பட்டியலில் இருக்குமோ என பயத்தில் உறைந்து போய் இருக்கிறார்கள்.