திருப்பூர் அனுப்பர்பாளையத்தை அடுத்த மாதம்பாறை பகுதியில் மாரி, முருகேஷ், செல்வராஜ், மோகன் ஆகியோருக்கு சொந்தமான எவர்சில்வர், செம்பு பாத்திரங்களுக்கு பாலீஸ் போடும் பட்டறைகள் அடுத்தடுத்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு பாத்திர பட்டறையில் இருந்து கரும்புகை வெளியாகி உள்ளது.
சிறிது நேரத்தில் அந்த பட்டறை முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. தொடர்ந்து அருகில் உள்ள 3 பட்டறைகளுக்கும் பரவி, தீ எரிய தொடங்கியது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறை அதிகாரிகள் தண்ணீரை அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு தீயை முற்றிலுமாக அணைத்தனர். இதில் 4 பட்டறைகளிலும் இருந்த சுமார் ரூ.8 லட்சம் மதிப்பிலான எவர்சில்வர், செம்பு உள்ளிட்ட பாத்திரங்களும், பாத்திரங்களுக்கு பாலீஸ் போடும் எந்திரங்களும் முற்றிலும் சேதம் அடைந்ததாக கூறப்ப்டுகிறது. இதுகுறித்து தகவலறிந்த 15 வேலம்பாளையம் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி பண்ணாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.