கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற வாகனம் மீது காஷ்மீர் மாநிலம் புல்வமாவில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில், 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலியாநார்கள். இந்த கொடூர தாக்குதல் நடைபெற்று ஓராண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
வீரர்களின் உயிர்த்தியாகத்தை நினைவு கூர்ந்து பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்தி வருகின்றனர். பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த ஆண்டு நடைபெற்ற கொடூரமான புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த துணிச்சலான வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். நாட்டை பாதுகாக்கும் சேவையில் தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த வீரர்கள் போற்றத்தக்கவர்கள். வீரர்களின் தியாகத்தை இந்தியா ஒருபோதும் மறவாது என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், புல்வாமா தாக்குதலின் தியாகிகளுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். நமது தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக மிகுந்த தியாகம் செய்த எங்கள் துணிச்சலான இதயங்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் இந்தியா என்றென்றும் நன்றியுடையதாக இருக்கும் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.