திருப்பூர் கொங்கு மெயின் ரோடு திருநீலகண்டபுரத்தில் இந்து முன்னணியின் கோட்ட செயலாளர் மோகனசுந்தரம் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த காரை மர்ம ஆசாமிகள் நேற்று முன்தினம் அதிகாலையில் தீ வைத்து விட்டு தப்பினார்கள். இதில் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதில் ஈடுபட்டவர்களை ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து 4 மர்ம நபர்களை வடக்கு போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளை கண்டு பிடித்து கைது செய்ய வலியுறுத்தியும், காவல்துறையை கண்டித்தும் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே நேற்று மாலை நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசுகையில்:-
கார் எரிப்பு சம்பவத்தில் மர்ம ஆசாமிகள் ரசாயன கலவையை பயன்படுத்தி உள்ளனர். இதில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். உரிய நடவடிக்கை இல்லாவிட்டால் திருப்பூரை காக்க கடையடைப்பு மற்றும் மக்களை திரட்டி பேரணி நடத்தப்படும் என்று கூறினார்.