மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக தமிழக அரசு விரைந்து அறிவிக்க வேண்டும் பரிசீலனை என்ற பெயரில் ஏமாற்ற வேண்டாம் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்
மயிலாடுதுறை மாவட்டத்திற்கான வழக்கறிஞர் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
இன்று நாகப்பட்டினத்தில் நடைபெற்ற மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக முதலமைச்சர் அவர்கள் மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க பரிசீலனை செய்து வருவதாக தெரிவித்து இருக்கிறார்.
கடந்த 30 ஆண்டுகளாக மயிலாடுதுறையை சேர்ந்த மக்கள் மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க போராடி வருகிறார்கள். புதிய மாவட்டம் கேட்காத மக்களுக்கு புதிய மாவட்டங்களை அறிவித்த தமிழக அரசு ,ஏனோ மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க தயங்கி வருகிறது.
சென்ற சட்டமன்ற தேர்தலில் மூன்று தொகுதிகளிலும் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களையே மயிலாடுதுறை கோட்ட மக்கள் வெற்றிபெற வைத்தாலும், அதற்கு நன்றிக்கடனாக தமிழக அரசு புதிய மாவட்டத்தை இதுவரை அறிவிக்காமல் பரிசீலனை என்ற பெயரில் ஏமாற்றி வருவதாக தெரியவருகிறது. நாளை மறுநாள் தொடங்க உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உடனடியாக மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவிக்க வேண்டும் அதை விடுத்து பரிசீலனையில் உள்ளது விரைவில் அறிவிப்போம் என்று ஏமாற்றக்கூடாது என தெரிவித்துள்ளார்.