திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தீவிரமாக நடந்து வருகிறது. நோய் தொற்று உள்ளவர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆகியோரை தனிமைப்படுத்தி அவர்களுக்கு ரத்தம் மற்றும் சளி மாதிரி எடுக்கும் பணி தொடர்ந்து வருகிறது. அதுபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குடியிருப்பு பகுதிகளை சுற்றியுள்ள வீதிகள், பகுதிகளை சேர்த்து மொத்தமாக மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு மண்டலங்களாக 10 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு இருக்கிறது. அந்த பகுதிகளை சிறப்பு கவனம் செலுத்தி கண்காணித்து வருகிறோம். அத்தியாவசிய பொருட்கள் அந்த பகுதிகளுக்கு எடுத்து சென்றால் கூட தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்துள்ளோம். ஒருவேளை அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்கும் வகையில் 1,650 படுக்கைகளுடன் அரசு மற்றும் தற்காலிக மருத்துவமனைகள் மாவட்டத்தில் பல பகுதிகளில் தயார் நிலையில் உள்ளன. வெண்டிலேட்டர் வசதியுடன் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. டெல்லி சென்று வந்தவர்களில் குடும்பத்தினருக்கு மாதிரி எடுத்து பரிசோதனைக்கு பிறகு கூட 43 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது. இருப்பினும் அவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள்.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்த போலீசார், அவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்ட செவிலியர்கள், டாக்டர்கள், சம்பந்தப்பட்ட பகுதியில் துப்புரவு பணி மேற்கொள்ளும் தொழிலாளர்கள் என ஒவ்வொருவரின் தொடர்புகளையும் மிகவும் நுணுக்கமாக கண்காணித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம். அந்தந்த துறை மூலமாகவும் பரிசோதனையை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் துணி முககவசம் மற்றும் சாதாரண முககவசங்களை பயன்படுத்தலாம். டாக்டர்கள், செவிலியர்கள் தான் என்.95 உள்ளிட்ட முககவசங்களை பயன்படுத்துகிறார்கள். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தாலே கட்டாயம் முககவசம் அணிந்து தான் வர வேண்டும். இவ்வாறு அவர் கலெக்டர் தெரிவித்தார்.