சேலத்தில் இருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு சரக்கு இரயிலில் பருத்தி விதைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்களை வெளியிடங்களுக்கு கொண்டு செல்வதில் வர்த்தகர்கள் உற்பத்தியாளர்கள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் பிரச்சனை உள்ளது. இந்த நிலைமையில் சேலம் இரயில்வே கோட்டம் அத்தியாவசிய பொருட்களை நாட்டின் பல்வேறு இடங்களுக்கு , சரக்கு இரயில்கள் மூலம் அனுப்பி வைப்பதற்கு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக சிறப்பு இரயில் பார்சல் வேன்களை இரயில்வே நிர்வாகம் இயக்குகிறது.
இந்நிலையில், சேலத்திலிருந்து பருத்தி விதை மூட்டைகளை பஞ்சாப் மாநிலத்திற்கு அனுப்புவதற்கு சேலம் இரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் சிறப்பு கவனம் செலுத்தினார்.குறிப்பாக, சேலத்தில் இருந்து பஞ்சாப் மாநிலம் பத்தின்டா நகருக்கு ஒரு சரக்கு இரயில் முழுவதும் 468 டன் பருத்தி விதைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பருத்தி விதை மூட்டைகள் அனுப்பப்படும் முன்னர் இரயில்வே தொழிலாளர்கள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் குறித்த சோதனை நடத்தப்பட்டது மேலும் தொழிலாளர்கள் அனைவருக்கும் கிருமிநாசினி கொண்டு கை கழுவ செய்யப்பட்டது . தொழிலாளர்களை முக கவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு பருத்தி மூட்டைகளை சரக்கு இரயிலில் ஏற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. பருத்தி விதைகளை சரக்கு இரயிலில் அனுப்பியதன் மூலம் சேலம் இரயில்வே கோட்டத்துக்கு ரூ. 27 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டியது. இந்த பணியை சேலம் இரயில்வே கோட்ட மேலாளர் யூ.சுப்பாராவ், கூடுதல் கோட்ட மேலாளர் ஏ.அண்ணாதுரை ஆகியோர் பாராட்டினர். இதனிடையே சரக்கு இரயில்கள் இயக்கம் குறித்து முதுநிலை வணிக மேலாளர்
இ.ஹரிகிருஷ்ணன் கூறுகையில், நாட்டின் பல்வேறு இடங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு சரக்குகளை அனுப்புவதற்கு சிறப்பு இரயில் பார்சல் வேன்களை சேலம் கோட்டம் இயக்கி வருகிறது. இந்த வாய்ப்பினை வர்த்தகர்கள் உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.