பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் கடை வாடகையை 3 மாத வாடகையை ரத்து செய்து தர பல்லடம் தாலூக்கா வியாபாரிகள் சங்கம் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வலியுறுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலூக்கா வியாபாரிகள் சங்கம் சார்பில் தலைவர் ஆனந்தா பி.செல்வராஜ், செயலாளர் விமல் பி.என்.பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் 40 கடைகள், தினசரி மார்க்கெட்டில் 160 கடைகள் என மொத்தம் 200 கடைகளை ஏலம் எடுத்து வியாபாரம் நடத்தி வருகிறோம். கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தியவுடன் கடைகளை மூடி விட்டு வியாபாரிகள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கி இருக்கிறோம். வியாபாரம் இல்லாததால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகையை செலுத்த முடியாத நிலைக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். எகவே, பாதிப்படைந்த வியாபாரிகளின் நலன் காக்க 3 மாத வாடகையை ரத்து செய்து உத்தரவிட வேண்டுகிறோம். இவ்வாறு அவர்கள் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளனர்..