மும்பையில் இருந்து திருப்பூருக்கு வந்த திருப்பூரை சேர்ந்த 10 பேருக்கு அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:- ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது. அதன்படி மும்பையில் பல்வேறு பகுதிகளில் திருப்பூரை சேர்ந்த 10 பேர் தங்கியிருந்து வேலை செய்து வந்தனர். இவர்கள் போக்குவரத்து முடக்கத்தின் காரணமாக தங்களது சொந்த ஊரான திருப்பூருக்கு வர முடியாமல் இருந்தனர். இதன் பின்னர் அரசு உதவியுடன் பஸ் மூலம் 10 பேரும் மும்பையில் இருந்து திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று காலை திருப்பூரை வந்தடைந்த அவர்களுக்கு அரசு மருத்துவ மனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது. அனைவரின் விவரங்கள் மற்றும் முகவரிகளும் சேகரிக்கப்பட்டுள்ளது. விரைவில் இவர்களது பரிசோதனை முடிவு தெரியவரும். மும்பையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால், சந்தேகத்தின் பேரில் இவர்களுக்கு இந்த பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.