மாவட்ட கலெக்டர் க.விஜயகார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;-
அண்மையில் மக்களிடையே பரவிவரும் கொரோனா வைரஸ் நோய் தாக்குதலிலிருந்து மக்களைக் காத்திடும் பொருட்டு அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளில் ஒன்றாக திருப்பூர் மாவட்டம் முழுமைக்கும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து திருப்பூர் மாவட்டத்திற்குள் வருபவர்களை சோதனை செய்து கொரோனாதாக்கம் உள்ளதா எனகண்டறிந்திடும் வகையில் திருப்பூர் மாவட்ட எல்லைகளில் 26 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தசோதனை சாவடிகளில் காவல்துறையினர், பொதுசுகாதாரத்துறை, உள்ளாட்சித் துறையினருடன் இணைந்து பணியாற்றிடும் பொருட்டு வருவாய்த் துறையைச் சார்ந்த அலுவலர்களும் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்.
வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து திருப்பூர் மாவட்டத்திற்குள் வருபவர்களை விடுபடாமல் மேற்காண்ட அலுவலர்களால், கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என பொது சுகாதாரத்துறையினரைக் கொண்டு கண்டறிந்து, அவசியம் ஏற்படின் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவர்;.
கொரோனா வைரஸ் நோய் தாக்குதலிலிருந்து பொதுமக்களைக் காத்திடும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவாறு தெரிவித்துள்ளார்.