தனது மானம் பெரிதல்ல அடுத்தவர் உயிர்தான் பெரிது என இடர் நேரத்தில் தனது வேட்டியை அவிழ்த்து காண்டூர் கால்வாயில் தத்தளித்த இரண்டு வன பணியாளர்களை காப்பாற்றிய 60 வயது விவசாயி கார்த்திகேயன்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம், வல்லாக்குண்டாபுரம் ஊராட்சி, தெற்கே மலைப்பகுதி அடிவாரத்தில் பி.ஏ.பி.,தண்ணீரை திருமூர்த்தி அணைக்கு கொண்டு செல்லும் காண்டூர் கால்வாயில் காட்டு யானை ஒன்று தவறி விழுந்து தத்தளித்து கொண்டிருந்தது. உடனடியாக தகவல் வனத்துறைக்கு செல்கிறது. உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறை குழுவினர் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் கட்டயன் செட்டு மூலப்படி அருகில் தண்ணீர் மூழ்கி மிதந்து வரும் யானையை தடுத்து, மீட்க முயற்சிக்கின்றனர்.
அப்போது கீழே தோட்டத்தில் வேலை செய்யும் விவசாயி கார்த்திகேயன் என்பவர் சம்பவ இடத்திற்கு வருகிறார். அப்போது யானையை மீட்கும் பணியில் ஈடுபட்ட மூன்று வனத்துறை பணியாளர்கள் எதிர்பாராத விதமாக கால்வாய் நீர் ஓட்டத்தில் அடித்து செல்லப்படுகின்றனர். கிழக்கே சுரங்க கால்வாய் உள்ளது விபரிதத்தை அறிந்த விவசாயி கார்த்திகேயன், தான் கட்டிய வேட்டியை அவிழ்த்து ஒரு முனையை பிடித்து வேகமாக ஓடிச்சென்று கால்வாய் தண்ணீரில் அடித்து செல்லப்படும் வன பணியாளர் முன் வீசுகிறார். ஒருவர் வேட்டியை பிடித்து மேலே ஏறி வந்து விடுகிறார்.
அடுத்து கீழே கிடந்த மரக்குச்சியை எடுத்து வனவருடன் பைக்கில் பின் ஏறி அமர்ந்து கொண்டு தண்ணீரில் அடித்து செல்லும் இருவரை காப்பாற்ற பைக்கில் வேகமாக சென்று அவர்கள் முன் மரக்குச்சியை நீண்டுகின்றனர் ஒருவர் மட்டும் பிடித்து ஏறி உயிர் தப்பிவிடுகிறார்.மற்ற ஓரு வனவர் சுரக்கப்பாதை வழியாக அடித்து செல்லப்பட்டு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்து விடுகிறார். அவர் உடல் மீட்கப்பட்டது. மேலும் கால்வாயில் விழுந்த யானையும் இறந்துவிடுகிறது. அதுவும் மீட்கப்பட்டது.தனது அறுபது வயதில் இரு மனித உயிர்களை காப்பாற்றிய விவசாயி கார்த்திகேயன் போற்றப்பட வேண்டியவர் ஆவார். விவசாயி கார்திகேயனுக்கு குடியரசு தலைவர் விருது பெற மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் பரிந்துரை செய்ய வேண்டும்.