தமிழகத்தை கலவர பூமியாக்க துடிக்கும் பாகிஸ்தான், சீனாவின் சதியை அரசு முறியடிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் :-
மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டி விட்டு தமிழகத்தை கலவர பூமியாக்க அண்டை நாடுகளான பாகிஸ்தானும் சீனாவும் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதற்காக பிரிவினைவாத இயக்கங்களுக்கு நிதியும் திட்டமும் வழங்கப்பட்டுள்ளதாக உளவுத் துறை கூறுகிறது. சதி செய்யும் நாடுகளென பாகிஸ்தானையும், சீனாவையும் உளவுத்துறை குறிப்பிட வில்லையென்றாலும் இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத அண்டை நாடுகள் இவைதான் என்பது நமக்கு நன்றாகத் தெரியும்.
இந்து மதத்தை, தெய்வங்களை கேவலப்படுத்தி இந்துக்களை ஆத்திரமூட்டும் வகையில் செயல்படுமாறு பிரிவினைவாதிகளுக்கு திட்டம் வகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக முருகப் பெருமானின் கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக விமர்சித்து தங்களது பணியை துவங்கி விட்டனர். மேலும் கோவையில் மகாகாளியம்மன் ஆலயம், விநாயகர் ஆலயம் உள்ளிட்ட மூன்று கோயில்களில் அநியாயங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. கோயிலின் முன்பு டயர் தீ வைத்து கொழுத்தப் பட்டிருக்கிறது.
சூலாயுதம் வளைக்கப்பட்டிருக்கிறது. பூஜை பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவல் மற்றும் பாதிப்புகளிலிருந்து மக்களை காப்பாற்ற அரசாங்கம் அதிக கவனம் கொடுத்து வரும் நிலையில் கலவரத்தை தூண்டும் பணிகள் நடந்து வருகின்றன.
வெளிநாட்டு நிதியுதவியினால் அசுர பலத்துடன் உள்ள பிரிவினைவாத சக்திகள் அப்பாவி இளைஞர்களை விலைக்கு வாங்கி கலவரத்தில் ஈடுபடவும், சமூக வலைதளங்களில் வெறுப்பு பிரச்சாரம் செய்யவும் பயன்படுத்துகின்றன.
தமிழகத்தின் அமைதியை சீர்குலைத்து கலவரம் நடத்த திட்டமிடும் வெளிநாட்டு உளவு அமைப்புகளின் சதியை முறியடிக்க தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.